
நெல்லையில் கடைக்குள் புகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் செய்யது தாமின் (31). இவர் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடையில் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு நேற்று இரவில் வீடு திரும்பிய செய்யது தாமின் இரவு உணவை முடித்துவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாகக் கூறிவிட்டு மீண்டும் கடைக்குச் சென்றுள்ளார்.
ஆனால், கடைக்குச் சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது எடுக்காததை அடுத்து அவரது தந்தை கடைக்குச் சென்றுள்ளார். கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது தந்தைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செய்யது தாமின் கடைக்குள் ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதனைக் கண்டு தந்தை அலறிக் கூச்சலிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செய்யது தாமின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.



