
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றத் தடையாக உள்ள திமுக அரசைக் கண்டித்துத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக, இந்து முன்னணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதை மதிக்காமல் திமுக அரசு தடை விதித்துள்ளதைக் கண்டித்துத் தூத்துக்குடி VVD சிக்னல் பகுதியில் இந்து முன்னணி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அரசுமூடு சந்திப்பில் தமிழக அரசிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக ஒன்றியச் செயலாளர் விஜயராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி மாவட்டப் பொதுசெயலாளர் வினோத்குமார், குலசேகரம் பேரூராட்சி முன்னாள் தலைவி ராதா உட்பட ஐம்பதுக்கு மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் போராட்டம் நடத்த இந்து முன்னணியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதற்காக இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சரண்ராஜ் தலைமையில் மாவட்டப் பொதுசெயலாளர் சாமிநாதன், பாஜக மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு, இந்து புரட்சி முன்னணி மாவட்டத் தலைவர் ஜோதி குமரன் ஆகியோர் வந்தனர். இதையடுத்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.





