
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்றால் உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. கட்சியின் சார்பில் கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியப்போது, கோவையில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக தூக்கி வீசப்பட்டிருப்பது, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை நிர்வாணமாக்கியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இல்லை என்றால் உடனடியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
இனி தமிழ்நாட்டில் பெண்கள் துப்பாக்கியோடு தான் வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் பேசியப்போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சுத்தமாக இல்லை என்றும் 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 65% அதிகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து முதல்வர் வீட்டில் ஒரு பெண் குழந்தைக்கோ, பெண்ணுக்கோ இந்த மாதிரி கொடுமை நடைபெற்றாலும் 24 மணி நேரத்தில் பிடிப்போம் என பதில் அளிப்பாரா என்று மாநில துணைத்தலைவர் குஷ்பூ சுந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.


