
பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி பிரிவில் நின்றிருந்த தண்ணீர் லாரி மீது, கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கோவை மதுக்கரை குரும்பம்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் அவரது மனைவி நர்மதா, மகள்கள் ஆர்த்தி, பூரணி மற்றும் வீட்டின் அருகில் வசித்து வந்த ராமன் உள்ளிட்ட ஐந்து பேர், காரில் பழனி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக, பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி சென்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பிரிவு அருகே, சாலை பராமரிப்பு பணிக்காக, தண்ணீர் கொண்டு வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, 5-பேர் பயணித்த கார், தண்ணீர் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதும் உருக்குலைந்த நிலையில், காரில் இருந்த மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது குறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


