Anti Terrorism Squad: தமிழக அரசு அதிரடி!

Advertisements

தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் ”தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் – ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கைமீதான விவாதத்தின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் 380க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு ரூ.57.51 கோடி செலவில் “தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

கடந்தாண்டு கோவை மாவட்டம் உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இதில் உயிரிழந்த ஜமேஷா உபின்  என்பவர் வீட்டிலிருந்து வெடிபொருட்கள், தீவிரவாத அமைப்பு வாசகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பாகத் தமிழ்நாடு அரசுமீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்தே “தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்படும் அறிவிப்பு வெளியானது

இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, இத்தகைய தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான முன்மொழிவு கடிதம் மற்றும் அத்தியாவசிய நிர்வாகச் செலவினங்கள் தொடர்பான பட்டியல் அளித்திருந்தார். அதில் ரூ.60 கோடி ஒதுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றத் தமிழ்நாடு அரசு தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

அதில் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு 383 பணியாளர்களைச் சேர்க்கவும், 89 புதிய வாகனங்களை ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் ஊதியம், நிர்வாகம் செலவுகள் என ரூ.56 கோடியும், திரும்பப் பெறப்படாத செலவினமான தளவாட செலவுகளுக்கு ரூ.26 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீவிரவாத தடுப்பு பிரிவானது உளவுத்துறை ஏ.டி.ஜி.பி தலைமையில் செயலபடும் எனவும் எனவும், இதில் 3 எஸ்பி, 4 ஏ.எஸ்.பி, 9 டிஎஸ்பி, 16 இன்ஸ்பெக்டர், 48 சப்-இன்ஸ்பெக்டர், 12 சப்- இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்ப பிரிவு), 45 தலைமை காவலர், 22 கான்ஸ்டபிள், 33 ஓட்டுநர்கள் என 193 பேர் இடம் பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீவிரவாத தடுப்பு பிரிவு தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராகச் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *