
தேனி அருகே எண்ணெய் மில்லில் பட்டப்பகலில் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள உதிரிப்பாகங்களைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ரமேஷ் ஐந்து வழிச்சாலைக்கு அருகில் இலவம் பஞ்சு விதை மற்றும் தீப எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார். அவர் மில்லைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றதை நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள் பூட்டியிருந்த மில்லின் உள்ளே ஏறிக் குதித்து அங்கிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த எந்திர உதிரிப்பாகங்கள், பூஜைப் பொருட்கள் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
மில்லிற்குத் திரும்பிய ரமேஷ் பொருட்கள் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட அந்த இரண்டு இளைஞர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



