
கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
கோவை – அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை பத்துக் கிலோ மீட்டர் தொலைவுக்குக் கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. ஆயிரத்து 671 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்தப் பாலம் தமிழ்நாட்டின் நீண்ட மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்தப் பாலத்தில் வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சில வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன.இதனைத் தடுக்கும் வகையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் கண்காணிப்புக் கேமரா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேம்பாலச் சந்திப்புப் பகுதிகளான கோல்டுவின்ஸ், உப்பிலிப்பாளையம் உட்பட மொத்தம் 44 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இதனால் வாகனங்களின் பதிவு எண், உள்ளே அமர்ந்து இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்து இருக்கிறார்களா? இல்லையா? அதிவேகத்தில் வாகனங்கள் செல்கிறதா? கூடுதல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறதா? ஆகிய அனைத்தையும் கண்டறிய முடியும். வாகனங்கள் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் சென்றால் உடனடியாக உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.



