
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி விழா நடந்த மைதானத்தில் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு மற்றும் திருக்குறள் பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
கண்காட்சியில் திருவள்ளுவர் சிலையின் மர சிற்பத்திலான மாதிரித் தோற்றம், திருக்குறள் ஓலைச் சுவடிகள், திருக்குறள் எழுதப்பட்ட பட்டுச் சேலை, புத்தகங்கள், மின்நூல்கள், திருவள்ளுவர் சிலை உருவான வரலாறுபற்றிய புகைப்படங்கள், திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தத் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை ஒரு வாரக் காலம் இலவசமாகப் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றனர்.




