
லாட்டரி அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை!
கோவை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள போதிலும் சிக்கிம், மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். Enforcement Directorate
இந்த நிலையில், இன்று வடகிழக்கு மாநிலங்களில், லாட்டரி தொழிலில் மார்டின் ஈடுபட்டுள்ள நிலையில், சட்டவிரோத பணிப்பரிமாற்றம் தொடர்பாகக் கோவை மாவட்டம் துடியலூர் வெள்ளைகிணறு பகுதியில் உள்ள மார்ட்டினின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே கடந்த மே மாதம் அவரது மகன், குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

