
வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான்.. ஔவையாரின் பாடலில் உழவின் இன்றியமையாமை தெரியும்.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி ‘தேசிய விவசாயிகள் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.
சரண் சிங்;
பல அரசியல் நெருக்கடி சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங்
‘ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட’த்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக ‘வேளாண் விளைபொருள் சந்தை மசோதா’வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.
அதேசமயம் உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர். உத்தரபிரதேச அரசில் வேளாண்துறை, வனத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
உத்தரபிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாளைய பிரச்னையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.
‘ஜமீன்தாரி முறை ஒழிப்பு;
கூட்டுறவு பண்ணை முறை’, ‘இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்’, ‘வேலை செய்பவர்களுக்கு நிலம்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியவர். தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்து வந்தவர். 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி இறந்தார். புது டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு, வட இந்திய விவசாய சமூகங்களின் அன்பின் காரணமாக ‘கிசான் காட்’ (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.
தன் வாழ்நாளில் விவசாயிகளின் நில உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக, 2001-ம் ஆண்டிலிருந்து வட இந்திய விவசாயிகள் சார்பாக,டிசம்பர் 23-ம் ததேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயம் சம்பந்தமாக கருத்தரங்குகள், கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தப்பட்டு அவர் பெயருக்கு சிறப்பு சேர்க்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் துயரங்கள்;
விவசாயிகள் தினம் குறித்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் இடம் பேசியபோது, “வருடத்தின் ஒவ்வொரு நாளும் வெயிலிலும், மழையிலும் கஷ்டபடும் விவசாயிகளை ஏதாவது ஒரு நாள் மட்டும் நினைத்துவிட்டு இருந்துவிடக் கூடாது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவின் போதும் விவசாயிகளை நினைக்க வேண்டும்.
அவர்களுடைய கஷ்டங்களை ஒவ்வொரு நாளும் உணர்ந்து, விவசாய சமூகங்களுக்கு இயன்ற உதவிகளை அளிப்பது நல்லது. இந்தியாவில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இதுபோன்ற துயரங்கள் எல்லாம் மறைந்து, விவசாயிகள் என்றைக்கு நிம்மதியாக அவர்களது தொழிலை செய்கிறார்களோ… அதுவே உண்மையான விவசாயிகள் தினமாக இருக்கும்” என்றார்.
மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது. அதன்பிறகு குட்டி குட்டி சாம்ராஜ்யங்களாக இருந்த ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட சட்டம் கொண்டு வரப்பட்டது. ‘ஜமீன்’ என்றால் இந்தியில் ‘பூமி’ என்று அர்த்தம். ஜமீன்தாருக்கு ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் சொந்தமானவையாக இருந்தது. அந்த நிலத்தில் உழுபவர்கள் ஜமீன்தாருக்கு வரியை கட்ட வேண்டும். ஆனால், நிலத்தின் மீது எந்த உரிமையையும் கோர முடியாது என்ற நிலை இருந்தது.
காலப்போக்கில் சட்டங்கள் வந்த பிறகு நிலங்கள் ஓரளவுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பெரும்பான்மையான நிலங்கள் இன்னும் நில உடைமையாளர்களிடம் இருந்து வருகிறது. இதன்பிறகு நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் விவசாயிகளுக்கு முழுமையான நிலங்கள் கைக்கு வரவில்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏதெதுக்கோ தினங்கள் கொண்டாடப்பட்டு வரும் காலகட்டத்தில், விவசாயிகளுக்கும் தினங்கள் கொண்டாடப்படுவது வரவேற்கத்தக்கது”
விவசாயம் காப்போம் .. வயிறார உண்போம்…


