salman khan:மரண பயத்தை காட்டிய சம்பவம்; சோகத்தில் சல்மான் கான்!

மும்பை: மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலையால் பயம் மற்றும் மன வேதனையில் இருக்கும் நடிகர் சல்மான் கான் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர், மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்ட அரசியல் தலைவர் பாபா சித்திக் பாலிவுட் பிரபலங்களுடன் நெருக்கமாக பழகியவர். இன்னும் சொல்லப்போனால் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர். ஆகவே அவரின் மரணத்தால் சல்மான் கான் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

இதுகுறித்து அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல்கள் பின்வருமாறு: நடிகர் சல்மான் கான் தற்போது தனிமையில் உள்ளார். லீலாவதி மருத்துவமனையில் பாபா சித்திக் சடலத்தை பார்த்துவிட்டு நேற்றிரவு தான் வீடு திரும்பி உள்ளார்.

மிகவும் மனம் உடைந்து காணப்பட்டு உள்ள அவர், தூக்கமின்றி தவித்து வருகிறார். பாபா சித்திக்கின் மகன் ஜீசன், அவர்கள் குடும்பத்தினர் பற்றி கேட்டவண்ணம் உள்ளார். பாபா சித்திக் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் குறித்து விசாரித்துக் கொண்டே இருக்கிறார்.

அடுத்த சில நாட்களுக்கான தமது தனிப்பட்ட மற்றும் சொந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சல்மான் கான் ரத்து செய்துவிட்டார். யாரையும் சந்திக்கும் மனோநிலையில் அவர் இல்லை. நடிகர் சல்மான் கானுக்கு தற்போது தனிமை தேவை.இவ்வாறு சல்மான் கான் உறவினர்கள் கூறி உள்ளனர்.

சமீபத்தில் தான் சல்மான் கான் வீடு மீது பிஷ்னோய் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது.அதன் தொடர்ச்சியாகவே பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இத்தகைய சூழலில் பாந்தராவில் உள்ள சல்மான் கான் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பின்றி எங்கும் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *