
சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடிகராகப் பணியாற்றி வருபவர் நடிகர் நேத்ரன். சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்களில் கூடத் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மருதாணி சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய நேத்ரன் சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.
நடிகர் நேத்ரன் சக நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். நேத்ரன் மனைவி தீபாவும் பிஸியாகப் பல தொடர்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகக் குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இன்று நேத்ரன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

