நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், வருகிற 18 ஆம் தேதி கோவையில் வாகன பேரணிக்கு பாஜகவினர் திட்டமிட்ட நிலையில், பாதுகாப்பு கருதி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி நாடு முழுவதும் பாஜக சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்து வருகிறார். அந்த வகையில், கடந்த 3 மாதங்களில் பிரதமர் மோடி 5 முறை தமிழகம் வந்துள்ளார்.
இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனையடுத்து வருகிற 18 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கோவையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ROAD SHOW நடத்த பாஜக சார்பாகக் கோவை காவல்நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் வழக்கறிஞர்களுடன் வந்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது நெரிசல் மிக்க பகுதி காரணமாகவும், பாதுகாப்பை கருதியும் காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடிROAD SHOW நடத்தியே தீருவோம் எனப் பாஜக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் தேதி தொடர்பாக நாளைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் வெளியாவதால் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் நீதிமன்றத்தில் முறையிட்டுப் பிரதமர் மோடியில் வாகன பேரணிக்கு அனுமதி பெற பாஜகவினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

