
புதுடில்லி: ‘நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இண்டியா கூட்டணியினர் போராடுவோம்’ எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ., அரசின் பட்ஜெட், விவசாயிகள், ஏழைகள் மற்றும் குறிப்பாக நடுத்தர மக்களுக்கு எதிரானது. இந்தப் பட்ஜெட்டில், மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. இது நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் எதிரானது.
நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக, இண்டியா கூட்டணியினர் போராடுவோம். பார்லிமென்டில் மக்களின் பிரச்னைகள்குறித்து கேள்வி எழுப்புவோம். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து இன்று பார்லிமென்ட் வளாகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.

