
புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அதிபர் ஷேக் முகமதுவை சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்தியாவின் ரூபாய், அமீரகத்தின் திர்ஹாமில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது.
சர்வதேச அளவில் அமெரிக்காவின் டாலர் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்த சூழலில் இந்திய ரூபாய்சர்வதேச நாணயமாக மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இப்போதைய நிலையில் ஜெர்மனி, பிரிட்டன், நேபாளம், பூடான், சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், கென்யா, மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட 18 நாடுகள் இந்திய ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த பட்டியலில் தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துள்ளது.
இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அப்துல் நாசர் கூறியதாவது:
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் நம்பகமான நட்பு நாடுகளாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் வலுவடைந்து வருகிறது. எரிசக்தி, உணவு தானியங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
ரூபாய், திர்ஹாமில் வர்த்தகம் மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவின் யுபிஐ, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐபிபி பணப் பரிவர்த்தனை நடைமுறைகள் இணைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் இருதரப்பு பொருளாதாரம் வரலாறு காணாத வளர்ச்சி அடையும்.இவ்வாறு அப்துல் நாசர் தெரிவித்தார்.

