
தூத்துக்குடி: ”நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன”, எனப் பிரதமர் மோடி கூறினார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகத் திறந்து வைத்தார்.
பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவின் கடலோர உள்கட்டமைப்பில், தூத்துக்குடி சர்வதேச கன்டெய்னர் டெர்மினல் புதிய நட்சத்திரமாகத் திகழ்கிறது. இந்தப் புதிய டெர்மினல் மூலம், வ.உ.சிதம்பரம் துறைமுகம் விரிவாக்கம் ஏற்படும். இந்தத் துறைமுகத்தால் செலவு குறைவதுடன், இந்தியாவின் அந்நிய செலாவவணியை சேமிக்கும்.
2 ஆண்டுக்கு முன், இந்தத் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் திறனை மேம்படுத்தப் பல பணிகள் துவங்கப்பட்டன. இந்த ஆண்டு பிப் மாதம் தூத்துக்குடி வந்தபோது துறைமுகம் தொடர்பான மேலும் பல பணிகள் துவங்கின. இந்தப் பணிகள் விரைவாக முடிவடைவதை கண்டு மகிழ்ச்சி இருமடங்கு ஆகிறது. இந்தத் துறைமுகத்தில் 40 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். இந்த முனையம் கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் அடையாளமாக மாறும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழக துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

