பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு லாலு பிரசாத்தின் காரை மறிக்க முயன்றவர் தன் சட்டையைத் தானே கிழித்துக்கொண்டு தேஜஸ்வி ஆட்சியமைக்க மாட்டார் என்று சாபமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதளத்தைச் சேர்ந்த மதன் ஷா முந்தைய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைச் சந்தித்துள்ளார். இந்த முறையும் போட்டியிட வாய்ப்புக் கேட்ட அவருக்குத் தேஜஸ்வி வாய்ப்பளிக்கவில்லை.
இந்நிலையில் பாட்னாவில் லாலு பிரசாத்தின் காரை மறித்து முறையிடச் சென்ற அவரைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
லாலு பிரசாத்தின் வீட்டுக்குள் விட மறுத்ததால் மதன் ஷா தன் சட்டையைத் தானே கிழித்துக்கொண்டு தரையில் உருண்டு புரண்டார்.
அதன்பின் செய்தியாளரிடம் பேசிய மதன் ஷா, தேஜஸ்வி அகங்காரம் பிடித்தவர் என்றும், மக்களைச் சந்திக்க மறுக்கும் அவர் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் கூறினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

