
வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் எந்த நேரத்திற்கும் பேச்சுவார்த்தைக்குத் தயாரென அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாகச் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ மற்றும் சிஐடியு, ஏ ஐ டி யு சி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ” போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் எந்த நேரத்திற்கும் பேச்சுவார்த்தைக்குத் தயார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையைத் தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிக்கைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தத் தடையும் இருக்காது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சீரழிந்த போக்குவரத்து துறையைத் தமிழக முதல்-அமைச்சர் ர் மீட்டெடுத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.



