
டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களின் விலையை மேலும் 10 ரூபாய் வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழகம் முழுவதும் 4829 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. அரசின் வருவாயில் மதுபான முக்கிய பங்கு வகிக்கிறது. திருவிழா, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை சினிமா படங்களின் வசூலையும் விஞ்சி சாதனை படைப்பது உண்டு.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் விதமாக டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப ‘ஆப்’ பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது. இதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அமலில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபான விலை உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


