
பாட்டிலுக்கு ரூ.10 இல்ல ரூ.20 கூட வாங்குவோம்; மீண்டும் மதுபான கடை ஊழியர் அடாவடி!
திருப்பூர்: சந்தைப்பேட்டை அருகே உள்ள அரசு மதுபான கடையில் பாட்டிலுக்கு 20 ரூபாய் கூடுதலாக வாங்கிய விற்பனையாளரிடம் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லடம் சாலை சந்தைபேட்டை பகுதியில் உள்ள 1945 எண்கொண்ட அரசு மதுபான கடையில் மது பிரியர் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது மது பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்த விலை ரூபாய் 460 (எம்ஆர்பி) என்று இருந்தது. மீதித்தொகையான 40 ரூபாயை தராமல் கடை ஊழியர் 20 ரூபாய் மட்டுமே திருப்பித் தந்துள்ளார்,
மது பாட்டிலில் 460 ரூபாய் தான் எம்ஆர்பி உள்ளது, எதற்காகக் கூடுதலாக இருபது ரூபாய் எடுக்கிறீர்கள்? என மது பிரியர் கேட்டபோது அதனைக் கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாமல் பிசியாக இருப்பது போல் காட்டிக்கொண்ட கடைஊழியரிடம் இது போன்று கூடுதலாக இருபது ரூபாய் கேட்கக் கூடாது என அரசு தெரிவித்து உள்ளது.
உங்களுக்கு வேலை வேண்டுமா, வேண்டாமா என அன்பாகக் கேட்கும் மதுப்பிரியர் விடாப்பிடியாக மது பாட்டிலை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் நான் கொடுத்த ஐநூறு ரூபாயை திரும்பித் தாருங்கள் எனக் கேட்டு 500 ரூபாய் பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு வீடியோ பதிவு செய்து கொண்டே அந்த மது பிரியர் அங்கிருந்து கலைந்து செல்வதுமான வீடியோவைச் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

