Tamilnadu : சுற்றுலாத் தலங்கள் அதிகம் உள்ளதாக மு.க.ஸ்டாலின் பேச்சு.!

Advertisements

தமிழ்நாட்டில் கண்டுகளிக்கப் பல்வேறு வகையிலான ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இன்றும் நாளையும் இரு நாட்களுக்குத் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளதாகத் தெரிவித்தார். நாகரிகத்தின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி தொல்லியல் ஆய்வுக் களங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம் சிற்பங்கள், ஒகேனக்கல், ஏற்காடு, உதகை, கொடைக்கானல் எனப் பல்வேறுபட்ட சுற்றுலாத் தலங்கள் குடும்பத்துடன் வரும் மக்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இரண்டு நாள் நடைபெறும் சுற்றுலா மாநாட்டில் சுற்றுலா தொடர்பான முதலீட்டாளர்கள், மேம்பாட்டாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமாகியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *