
உக்ரைனில் டிரோன்கள் மூலம் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் சுரங்கத் தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் நீப்ரோபெட்ரோவ்ஸ்க் மண்டலத்தில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து மீது ரஷ்ய ராணுவம் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும், குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் சபோரிசியாவில் மகப்பேறு மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் நடத்தியதில் பேறுகாலத்துக்கு வந்துள்ள பெண்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் கிழக்கில் உள்ள டோன்பாஸ் மண்டலம் உட்பட ஐந்தில் ஒருபகுதியை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் சபோரிசியாவில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையத்தைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உக்ரைன் கோரி வருகிறது.


