
கர்நாடகத்தில் பெங்களூர் அருகே அமைந்துள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உறுதியளித்தபடி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி, அதைக் கண்டித்துப் போராட்டம் நடத்த உள்ளதாக ஊர்மக்கள் அறிவித்துள்ளனர்.
பெங்களூர் ஊரக மாவட்டத்தில் தொட்டகொள்ளப்பள்ளி, அருவனப்பள்ளி ஊராட்சிகளில் 5 இலட்சத்து 33 ஆயிரம் சதுல மீட்டர் பரப்பளவில் பாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்தியாவில் பாகங்களை ஒருங்கிணைத்து ஐபோன் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலை இதுவாகும். இந்தத் தொழிற்சாலை ஊராட்சிக்கு முறையாக வரி கட்டுவதில்லை என்றும், கட்டுமான விதிகளை மீறியுள்ளதாகவும், முதலில் உறுதியளித்தபடி உள்ளூர் மக்களுக்கு வேலை தரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கட்டுமான விதிகளை மீறியுள்ளது பற்றியும், முறையாக வரி செலுத்தாதது குறித்தும் பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.



