
திரைக்கதை மற்றும் விமர்சனம் :
சூரி – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் மாமன். சூரியின் அக்கா ஸ்வாசிகா திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் கர்ப்பம் ஆகாமல் இருக்கிறார். இதனால் ஊரில் அனைவரும் அவரை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் முதல் முறையாக கர்ப்பம் ஆகும் ஸ்வாசிகாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது.
தனக்கு மருமகன் பிறந்துவிட்டான் என்கிற மகிழ்ச்சியில் தனது ஒட்டுமொத்த அன்பையும் அவனுக்கே தருகிறார் சூரி. காலை எழுந்து அவனை குளிப்பாட்டி, பள்ளிக்கு அனுப்புவதில் இருந்து இரவு தன்னுடன் தூங்க வைப்பது வரை, பெற்றோர்கள் செய்ய வேண்டிய அனைத்தும் சூரியே செய்கிறார்.இதனால் அவன் ஒரு நிமிடம் கூட தனது மாமனை விட்டு பிரிய மாட்டேன் என்கிற முடிவுடன் இருக்கிறான். இந்த நிலையில், சூரிக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின்பும் சூரியை விட்டு அவரது மருமகன் சிறுது நேரம் கூட பிரியாமல் இருக்கிறான்.
முதலில் இதை பெரிதாக ஐஸ்வர்யா எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நாட்கள் போகப்போக இது பெரிய பிரச்சனையாக வெடிக்கிறது. இதனால் சூரிக்கும் ஐஸ்வர்யாவிற்கு கடும் சண்டை ஏற்பட, ஒரு கட்டத்தில் குடும்பத்தில் இருந்து பிரிய முடிவு எடுக்கின்றனர். இதனால் உறவுகள் இடையே விரிசல் விழ, மீண்டும் அந்த உறவுகள் இணைந்ததா என்பதே படத்தின் மீதி கதை.கதாநாயகன் சூரி மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சூரியின் மருமகனாக நடித்த சிறுவனின் நடிப்பும் சிறப்பு. இவர்களை தவிர்த்து ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் இருவரின் கதாபாத்திரங்களும் அழகாக இருந்தது. அவர்கள் இருவரின் கதாபாத்திரங்களை, சூரி – ஐஸ்வர்யா லட்சுமி கதாபாத்திரங்களுடன் இணைத்த விதம் ரசிக்க வைத்தது.
அனைவருக்கும் கனெக்ட் ஆகுமா என கேட்டால், அது சந்தேகம் தான். குறிப்பாக இந்த காலத்து 2k கிட்ஸுக்கு இது எந்த அளவிற்கு கனெக்ட் ஆகும் என தெரியவில்லை. எடுத்துக்கொண்ட கதைக்களத்தை திரைக்கதையில் எமோஷனலாக வடிவமைத்து திரையில் அழகாக வழங்கியுள்ளார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். மேலும் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதமும் ரசிக்கும்படியாக இருந்தது.


