
ஞானவேலு இயக்கும் தலைவர் 170வது படத்தில் ரஜினி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வன்னியர் சங்கம் பைகாட் ரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கி வருகிறது.
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் 2021ம் ஆண்டுத் திரைக்கு வந்தது. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒடுக்கட்டப்பட்ட மக்கள்மீது நடத்தப்பட்ட சாதி வன்மத்தை கூறும் படமாக ஜெய்பீம் இருந்ததால் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.
ஒடுக்கபட்ட வர்க்கத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்டுக் குரல் கொடுக்கும் சூர்யாவின் நடிப்பு பலரது அப்லாஸ்களை பெற்றது. ஜெய்பீம் படத்தில் மற்றொரு சிறப்பாகத் தனது பணிக்காலம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை மக்களுக்காக வாதாடிய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் கேரக்டராகச் சூர்யா நடித்து இருந்தார்.
ஒரு பக்கம் ஜெய்பீம் படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், மற்றொரு பக்கம் குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், வெறுப்பை தூண்டும் விதமாகவும் படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குறிப்பிட்ட சமூகத்தைச் சுட்டிக்காட்டவே படத்தில் அக்னி குண்டமும், மகாலட்சுமி புகைப்படமும் இடம்பெற்றதாகக் கூறி சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்கு எதிராக ருத்ர வன்னியர் சேனா அமைப்பினர், நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதன் காரணமாகப் படத்தில் இடம்பெற்றிருந்த அக்னி குண்டம் காட்சி நீக்கப்பட்டது. சமீபத்தில் குறவர் சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி, அளிக்கப்பட்ட புகாரில் சூர்யா பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தி ஜெய்பீம் திரைப்படத்தை ஞானவேல் இயக்கியதாகவும், அவருடைய படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ள வன்னியர் சங்கம், ரஜினி தலைவர் 170 படத்தில் நடித்தால், பாபா படத்தைவிட பத்து மடங்கு பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், சமூக வலைதளங்களில் வன்னியர் பைகாட் ரஜினிகாந்த், வன்னியர் பைகாட் ஞானவேல், வன்னியர் பைகாட் லைக்கா என்ற ஹேஷ்டேக் வைரலாக்கப்பட்டு வருகிறது.


