
மேற்கு வங்க மாநில அரசின் 20 இலட்சம் ஊழியர்களுக்கு 2008 முதல் 2019 வரையுள்ள அகவிலைப்படி நிலுவையைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகத் தங்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று கோரிக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கவும், 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிலுவையைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மாநிலத்தில் 20 இலட்சம் அரசு ஊழியர்கள் உள்ள நிலையில் அரசுக்குக் கூடுதலாகப் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவாகும். இந்நிலையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே முடிந்தது.
அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 2008 முதல் 2019 வரையான அகவிலைப்படி நிலுவையைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இடைக்கால உத்தரவில் கூறியபடி நிலுவைத்தொகையில் குறைந்தது 25 விழுக்காட்டுத் தொகையை மார்ச் ஆறாம் நாளுக்குள் வழங்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.



