Sultan Ibrahim: 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் பதவியேற்பு!

Advertisements

கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் புதிய மன்னரின் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

கோலாலம்பூர்: மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழா தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மலேசியாவின் பிற தலைவர்கள் முன்னிலையில், சுல்தான் இப்ராகிம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பதவி பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டார். அதே சமயம் நாட்டின் துணை தலைவராக பேராக் மாகாணத்தின் ஆட்சியாளரான சுல்தான் நஸ்ரின் ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக மலேசியாவின் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவின் பதவிக்காலம் நேற்று நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று புதிய மன்னர் பதவியேற்றுள்ளார்.

மலேசியா ஒரு அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்குள்ள ஒன்பது சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள், தங்கள் மாகாணங்களின் தலைவர்களாகவும், மதத் தலைவர்களாகவும் செயல்படுகின்றனர். இவர்கள் சுழற்சி முறையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மன்னராக பதவியேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *