
பெண் டாக்டரைப் பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சைஜு (வயது 53). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று எர்ணாகுளம் அருகே அம்பேத்கர் மைதானம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த எர்ணாகுளம் வடக்கு போலீசார் அங்குச் சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து பெண் டாக்டர் ஒருவர் சொந்த ஊர் திரும்பினார். அவருக்குச் சொந்தமாகத் திருவனந்தபுரம் மலையின் கீழ் பகுதியில் ஒரு கடை இருந்தது. அந்தக் கடையை வாடகைக்கு எடுத்திருந்த நபர் காலி செய்ய மறுத்ததாகவும், வாடகை தர மறுத்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாகப் பெண் டாக்டர் அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சைஜுவிடம் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அவர் கடையைக் காலி செய்து ஒப்படைப்பதாகக் கூறி பெண் டாக்டரைப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் அவர் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும், பெண் டாக்டரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறியும், அவரது வீட்டிற்கு சென்று தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் சைஜுவின் மனைவி பெண் டாக்டரைத் தொடர்பு கொண்டு, கணவருடனான தொடர்பைக் கைவிடுமாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பெண் டாக்டர் எச்சரித்தும் சைஜு அதனைப் பொருட்படுத்த வில்லை. இதையடுத்து அந்த டாக்டர் கேரள மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு வழக்குப்பதிவு செய்து, பெண் டாக்டரிடம் வாக்குமூலம் பெற்றார். மேலும் சைஜு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர், சிலரை வைத்துப் பெண் டாக்டர் பணம் கேட்டுத் தொல்லை கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார். இதற்கிடையே வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், ைசஜு தற்கொலை செய்து உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


