சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வந்தார். இவருக்குப் பொற்கொடி என்ற மனைவியும், சாவித்திரி என்ற இரண்டரை வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள்போலச் சீருடையில் வந்த கும்பல் திடீரெனப் பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட்ராங்கை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியது. இதனைத் தடுக்க வந்த அவரது நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனையடுத்து அந்தக் கும்பல் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் தலைநகர் சென்னையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


