
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி பகல்பத்து திருவிழா; கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாதம் டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி பிறக்கிறது.
இம் மாதத்தில் நடைபெறும் பகல் பத்து , ரா பத்து இன்று ஆண்டாள் கோவிலில் தொடங்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.புராணக் கதைகளின் படி மார்கழி மாதத்தில் ஆண்டாள் வைகறையில் எழுந்து பெருமாளை நினைத்து வழிபட்டு பெருமாளை மணந்ததாக கூறப்படும் நிலையில் திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதம் நோன்பு இருந்து ஆண்டாளை வழிபட்டால் மணவாழ்க்கை விரைவில் அமையும் என்பது ஐதீகம்.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் விடியற்காலை 4 மணிக்கே பக்தர்கள் கூடி ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை பாடி கூட்டு பிரார்த்தனை செய்வர்.
பூமாதேவியான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர். ஆண்டாள் சிறு வயதிலேயே கண்ணன் மீது காதல் கொண்டு கண்ணனையே தனது கணவனாக அடைய இறைவனை வேண்டி நோன்பு இருந்துள்ளார். மார்கழி மாதம் 30 நாட்களும் விரதம் இருந்து திருப்பாவை பாடி கண்ணனை தன் மணவாளனாக அடைந்தாள்.
பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோவிலில் நடக்கும் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதம் நோன்பு இருந்து ஆண்டாளை வழிபட்டால் மணவாழ்க்கை விரைவில் அமையும் என்பது ஐதீகம்.
இந்தாண்டு மார்கழி மாத திருவிழாவையொட்டி, மார்கழி பகல் பத்து உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்று மாலை 4.35 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் கோவிலில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு தனது பிறந்த வீட்டிற்கு வருகிறார். அங்கு ஆண்டாளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இன்று முதல் வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் பகல் பத்து திருவிழா நடைபெறுகிறது.
வருகிற 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள், நிர்வாக அதிகாரிகள், கோவில் அதிகாரிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

