
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலய ஒருங்கிணைப்பு கூட்டம்
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
டி.எஸ்.பி விக்னேஷ், திருக்கோயில் இணை ஆணையர் ரமணி, வட்டாட்சியர் மதன், நகராட்சி ஆணையர் அருள், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் அன்பரசு உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
முருகன் கோயிலில் 31-ம் தேதி காலை திருப்படி திருவிழா மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு விழா முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திருத்தணியில் குவிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக சுகாதாரம், குடிநீர், பேருந்துகள் சேவை, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈட்படுத்தப்படுவது, தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்திருப்பது, குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கி பேசினர்.
அதே நேரத்தில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் வரும் 27-ம் தேதி ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.


