1535 kg Ganja Seized In Thoothukudi: 1535 கிலோ கஞ்சா பறிமுதல்!

Advertisements

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு மட்டுமே இதுவரை 1535 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலமாக அதிகளவிலான கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் மற்றும் வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் பெரியசாமிபுரம் கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக சென்று கொண்டிருந்த (TN 50 D 2896) என்ற வாகனம் பதிவெண் கொண்ட இனோவா காரை வழிமறித்து மடக்கியுள்ளனர்.

இதனால் காரில் இருந்த 2 பேர் போலீசாரைக் கண்டவுடன் காரை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் பிடித்து காரை போலீசார் சோதனை செய்ததில், காரில் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 529 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் காருடன் 529 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுமட்டுமின்றி, கஞ்சாவை கடத்திச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் சிவராஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த சேதுபாண்டி என்பவரின் மகன் தர்மேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து சூரங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு வருகை தந்து எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் மற்றும் கடலோர காவல் நிலைய போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன்,

இந்த 529 கிலோ கஞ்சா கடத்தல் தொடர்பாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது, தகவல் வந்தவுடன் விரைந்து செயல்பட்டு போலீசார் கஞ்சா கடத்திய இருவரை கைது செய்து 529 கிலோ கஞ்சாவையும் காரையும் பறிமுதல் செய்தனர். இதனால் உடனடியாக செயல்பட்டு இவ்வளவு பெரிய கஞ்சா கடத்தலை தடுத்த போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.. மேலும் இந்த கஞ்சா எங்கிருந்து வந்தது? யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை 1535 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற முழு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *