Speaker’s M. Appavu: சபாநாயருக்கு மிரட்டல்!

Advertisements

இடைத்தரகர்கள் மூலமாக மத்திய அரசின் அமைப்புகள் மிரட்டிப் பணம் பெறுவதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது:

“ஆண்டுக்கு 3 முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு அதிகமாகச் செல்கின்றனர். 170 நிறுவனங்களுக்கு மத்திய மாநில அங்கீகாரம் வழங்கப்பட்டு, அதன்மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி சிறப்பாகச் செயல்படுகின்றனர். மத்திய புலனாய்வு அமைப்புகளான வருமானவரித்துறை, சிபிஐ, மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவை மத்திய அரசின் மனநிலையை தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களைக் குறி வைக்கின்றனர்.

என்னிடம் கடந்த 3 மாதங்களாக இடைத்தரகர்கள் பலர் பேசுகின்றனர். மத்திய அரசுமூலம் உங்களிடம் பிரச்னை செய்யச் சொல்லி இருக்கிறார்கள் என அமலாக்கத்துறை இடைத்தரகர்கள் என்னிடம் பேசினார்கள். அவர்கள் என்னை ஊரை விட்டுப் போகச் சொன்னார்கள். செல்போன் எண்ணை மாற்றச்சொன்னார்கள். இப்படி எனக்குக் கடந்த 3  மாத காலமாக அழைப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சாசனம் 91ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு 6 வாரங்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று சொல்லிக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆளுநர் எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ, எவ்வளவு கிடப்பில் போட முடியுமோ அதைச் செய்து கொண்டிருக்கிறார்.

உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும். மதச்சார்பின்மை நாடு என்று அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள நிலையில் மதச்சார்புடைய நாடு இந்தியா என ஆளுநர் பேசுகிறார். அண்ணாமலை அவரைக் குறித்து அவரே சொல்லி இருக்கிறாரா எனத் தோன்றுகிறது.

மின்வாரியத்தில் நிலக்கரி வழங்கியதில் 800 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்ற இழப்பு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை,  25 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு 500 முதல் 1000 நபர்களுக்கு வாங்கிய கடனை த்ள்ளுபடி செய்த மத்திய அரசு, விவசாயிகள் வாங்கிய கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை.” இவ்வாறு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *