
மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சர்வாதிகார ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கட்டுரை ஆங்கில நாளிதழில் வெளியாகி உள்ளது. அந்தக் கடிதத்தை இணைத்துத் தனது சமூக வலைத்தளத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல்: நோயை விடக் கொடிய மருந்து எனப் பதிவிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு கூறி வரும், ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய அரசிலமைப்புச் சட்டத்தைச் சிதைத்து அதன் அடிப்படைக் கட்டமைப்பையே மீறுவது என்றும் மு.க.ஸ்டாலின் குறை கூறியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் சட்டப்பேரவை மீதான நம்பிக்கை சீர்குலைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சட்டப்பேரவை மீதான நம்பிக்கை சீர்குலைவதால், மாநிலத்தில் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பே முனை மழுங்கிப் போய்விடும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே தலைகீழாகத் திருப்பக்கூடியது என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவை அதிபர் ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடி உள்ளார்.




