
கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுமீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு சோதனை நடப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் வீட்டில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொள்வத் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி தொகுதியிலிருந்து எம்எல்ஏவாகத் தேர்வானவர் பிரபு, இவர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக டிடிவி அணிக்குச் சென்றார்.
இதனையடுத்து சிறிது காலத்தில் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பினார். இந்தநிலையில் கள்ளக்குறிச்சி தியாகதுருவத்தில் உள்ள பிரபுவின் வீடு, பால் பண்ணை, தந்தை வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீ்டு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தத் திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுமீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியாத் திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

