வேலுமணி சி.வி.சண்முகம் மோதல்.. ராஜினாமா செய்யும் சி. வி. சண்முகம்..!

Advertisements

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். திமுகவின் ஆதரவுடன் எடப்பாடி முதல்வராகும் கனவும் நடைபெறவில்லை. அமைச்சரவையில் இடம்பெறும் வேலுமணி அணியின் முயற்சியும் நடைபெறவில்லை.

இதனால் இரண்டு அணியினரும் சமாதானம் ஆகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடிக்கு எதிராக தர்மயுத்தம் 2.0 நடத்திய எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் இடையே மோதல் வெடித்துள்ளது. எல்லா பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம் என வேலுமணியை சி.வி. சண்முகம் சாடியுள்ளார்.

அதிமுகவில் தினசரி பல்வேறு புதிய பிரச்சனைகள் வெடித்து கொண்டிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி அணிக்கும், எஸ்.பி வேலுமணி, சி.வி. சண்முகம் அணிக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. எடப்பாடிக்கு எதிராக தொடங்கிய இந்த பிரச்சனையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு மீண்டும் அவரிடமே சரண்டராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரே அணியில் உள்ள எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், “அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று, எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலக வைக்க வேண்டும் என்பதுதான் வேலுமணி, சண்முகம் அணியின் நோக்கமாக இருந்தது.

இதில் சி.வி. சண்முகம் மிகவும் உறுதியாக இருந்தார். அதனால் தான் ஆரம்பத்தில் அவரே முன்னிலை வகித்து எடப்பாடிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார். ஆனால் இடையே தவெகவை ஆதரிக்கும் முடிவை எஸ்.பி. வேலுமணி எடுத்தார். அமைச்சரவையில் இடம் கொடுப்பார்கள் என வேலுமணி கூறினார். ஆனால் தவெக காலை வாரிவிட்டது.

வேலுமணி, சண்முகம் அணியில் இருந்த 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி அணியில் இணைந்துவிட்டனர். மேலும் 4 எம்எல்ஏக்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் வேலுமணி, சண்முகம் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் எடப்பாடியிடமே சரண்டராகியுள்ளனர்.

வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் நேற்று எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் சண்முகம் பயங்கர கோபமடைந்துள்ளார். ‘எல்லா பிரச்சனையும் உங்களால் தான். எடப்பாடி எதிர்ப்பு திட்டத்தில் உறுதியாக இல்லாமல், தவெக பக்கம் சாய்ந்தது தவறாகிவிட்டது. நம் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைய நீங்கள் தான் காரணம்’ என்று சரமாரியாக விமர்சித்துள்ளார்.

இதற்கு வேலுமணியும் கடும் கோபமடைந்து, ‘எல்லோரும் சேர்ந்து தான முடிவு செய்தோம். கடைசியில் என்னை மட்டும் குற்றம் சொல்வது நியாயமில்லை. அங்கே சும்மா இருந்தவர்களை துாண்டிவிட்டதே நீங்கள்தான். இல்லையென்றால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது’ என்று விமர்சித்துள்ளார். இருவரிடமும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட, சீனியர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர் என்றார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *