
பிலிகுண்டு: கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன்காரணமாக குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகர் மாவட்டங்களில் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து அங்கிருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது. கர்நாடகாவில் இருந்து பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

