Sivaganga custodial death : உயிரைப் பறி கொடுத்து, போலீஸ் வன்கொடுமை விழிப்புணர்வை ஏற்படுத்திய அஜித்குமார்!

Advertisements
உயிரைப் பறி கொடுத்து, போலீஸ் வன்கொடுமை விழிப்புணர்வை ஏற்படுத்திய அஜித்குமார்!
சமூக ஊடகங்கள் நாளிதழ்கள் டிவி சேனல்கள் அனைத்துமே கடந்த சில நாட்களாகத் தீவிரமாக விவாதித்து வருவது அஜித் குமாரை போலீசார் அடித்துக் கொன்ற சம்பவம் பற்றி தான்! அன்று முதல் தொடர்ந்து போலீஸ் சார் இது போன்று அத்துமீறித் தாக்கிய வீடியோக்கள் வந்த வண்ணமாக உள்ளன. அவற்றில் நிறைய பழைய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் மக்கள் அவற்றை ஆர்வமாகப் பார்த்துக் கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் உயர் போலி சதி அவர்கள் தனியாக அமைத்திருந்த சிறப்பு காவல் படைகள் அனைத்தும் கலைக்கப்படுவதாகப் போலீஸ் டிஜிபி சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் காவல்துறை மூத்த அதிகாரிகளிடமிருந்தும் போலீசாருக்கு வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளைத் தடுப்பதற்கான உத்தரவுகள் மற்றும் அறிவுரைகளும் சமூக ஊடகங்களில் வந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக யாராவது ஒருவர் போலீஸ் நிலையத்தில் பொய்யான புகார் கொடுத்தால் கூடத் தொடர்புடையவர்களை ஃபோனில் அழைத்து விசாரணை என்ற பெயரில் என்னென்னவோ நடந்து வருகின்றது. பத்திரிகையாளர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றபின் சிவில் பிரச்சனை ஒன்றில் எனக்கே கூடக் கடந்த எட்டு ஆண்டுகளாக இது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதாவது போன் செய்து விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து அரங்கேறி வருவதை நாள்தோறும் நாம் பார்த்து வரும் ஒரு விஷயம் தான்.
ஆனால் இந்தப் படுகொலைக்குப் பிறகு பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு இதே போன்று அத்து மீறும் போலீசாரை துணிச்சலாகக் கேள்வி கேட்கும் இளைஞர்பற்றிய வீடியோக்களும் வந்து கொண்டிருக்கின்றன.
“என் தந்தை மீது புகார் என்றால் என்னை ஏன் விசாரணைக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்?” என்று காவல் நிலையத்திலேயே தைரியமாகக் கேள்விகளுக்கும் இளைஞர்களையும் பார்க்க முடிகிறது.இதில் மிகவும் வேதனையான ஒரு தகவல் என்னவென்றால் தனது ஸ்கூட்டி திருடு போனது தொடர்பாகச் சென்னை ஆவடி காவல் நிலைய சரக பகுதி இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட சோகமான அனுபவம் ஒன்றுதான். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஸ்கூட்டியை போலீசார் கண்டுபிடித்து விட்டனர். ஆனால் அதைத் திரும்பிக் கொடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் ரூபாய் பேரம் பேசப்பட்டு கடைசியில் ஒரு தொகைக்குப் போலீசார் சம்மதித்து வண்டியைத் திருப்பிக் கொடுக்க முடிவு செய்தனர்.
இறுதியில் தான் யாரும் எதிர்பாராத ஒரு ட்விஸ்ட். போலீஸ்காரர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் காதல் வசனம் பேச ஆரம்பித்துத் தனியாக ரூம் போடுகிறேன் என்று வரச் சொல்லும் அளவுக்குத் துணிந்து விட்டார். தனது அண்ணனுடன் அந்தக் கயவனை மாட்டி விட முடிவு செய்த அந்தப் பெண்ணும் லாட்ஜ் வரை சென்று நடந்த அத்தனை சம்பவத்தையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டு விட்டார். அது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இது போன்ற புகாரில் புகார் கூறப்பட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்குப் போன் மூலம் அழைக்கக் கூடாது என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. புகார் இருந்து அந்தப் புகாரில் முகாந்திரம் தெரிய வந்தால் முறைப்படி குற்றம் சாட்டப்பட்டவருக்கு காவலர்மூலம் சம்மன் என்கிற அழைப்பாணை கொடுக்க வேண்டும்.
அந்த அழைப்பாணையில் புகார் கொடுத்தவர், புகார் விவரம் உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்சங்கள் இடம் பெற வேண்டும். இதில் ஒன்று இல்லை என்றால் கூட விசாரணைக்கு வர மறுக்கலாம் என்றும் அதிகாரிகள் அந்த அறிவிப்பில் தெளிவாக விளக்கி உள்ளனர். ஒரு வகையில் இது போன்ற அறிவிப்புகள் இப்போதுதான் வரத் தொடங்கி இருப்பது வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
செய்தித்தொகுப்பு :செந்தூர் பாண்டியன் 
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *