
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்…
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் எஸ்.டி.ஆர்.48. சிம்புவின் 48-வது படமான இதைக் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
எஸ்.டி.ஆர் 48 படத்திற்காக நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாங்காக் சென்று அங்குப் பிரத்யேக பயிற்சியை எடுத்து வந்ததோடு, உடல் எடையையும் குறைத்து வந்தார். தற்போது எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்திற்கான கலந்துரையாடலின்போது நடிகர் சிம்பு உடன் எடுத்த புகைப்படங்களை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களில் தலையில் கொண்டை போட்டு, புலி படம் போட்ட டீ-சர்ட் அணிந்து மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் சிம்பு. லுக் வெளியாகிவிடக் கூடாது என்பதற்காகச் சிம்புவின் பின்னால் இருந்து எடுத்த போட்டோவை மட்டும் வெளியிட்டு இருக்கிறார் தேசிங்கு. இதைப்பார்த்த ரசிகர்கள் வேறலெவல் சம்பவத்துக்குத் தயாராகிவிட்டீர்களா எனக் கேட்டு வருகின்றனர்.
எஸ்.டி.ஆர் 48 திரைப்படம் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாகத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். அவருக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகையை நடிக்க வைக்கப் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

