Shiv Nadar Foundation: ப்ளஸ் 2 வரை இலவசமாக உலகத்‌தர கல்வி.. கல்வித்துறையுடன் கைகோத்த ஷிவ்நாடார்!

Advertisements

ஷிவ்‌ நாடார்‌ அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஊரகப் பகுதிகளில்‌ பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத் தரம்‌ வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக் கல்வித்துறைக்கும்‌ ஷிவ்‌ நாடார்‌ அறக்கட்டளைக்கும்‌ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்‌ மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காகச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில் இன்று (22.02.2024) தலைமைச்‌ செயலகத்தில் தமிழ்நாட்டின்‌ ஊரகப்‌ பகுதிகளைச்‌ சேர்ந்த பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்புவரை உலகத்‌ தரம்‌வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கிட பள்ளிக்கல்வித்‌ துறைக்கும்‌, ஷிவ்‌ நாடார்‌ அறக்கட்டளைக்கும்‌ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்‌ மூலம்‌, சென்னையில்‌ சிவ்‌ நாடார்‌ அறக்கட்டளையால்‌ நிறுவப்படவுள்ள உண்டு உறைவிட பள்ளியில்‌ 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்புவரை உலகத்தரம்‌ வாய்ந்த கல்வியை மாணவ / மாணவிகள்‌ பெறுவர்‌.

தமிழ்நாட்டில்‌ ஊரகப்‌ பகுதியில்‌ உள்ள மாணவர்கள்‌ இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்‌ மூலம்‌, உண்டு உறைவிட பள்ளியில்‌ தங்கி பயின்று சிறந்த கல்வி சூழலையும்‌, கல்வி கற்கும்‌ திறன்‌ மேம்படுவதற்கான பயிற்சியினையும்‌ பெறுவர்‌. மாணவிகள்‌ 50% வாய்ப்பு பெறுவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம்‌ மாணவர்கள்‌ தகுதியான உயர் கல்வியைத் தொடர்ந்து பயின்று வருங்காலங்களில்‌ அறிவுத் திறன்மிக்க இளைஞர்களாக வளர்வதற்கு இந்த ஒப்பந்தம்‌ பேருதவியாக இருக்கும்‌.

நிகழ்ச்சியில், ’’கல்வியையும் கற்றல் முறையையும் ஜனநாயகப்படுத்தும் செயல் திட்டத்தின் ஓர் அங்கம் இது. அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்வதை எளிதாக்கி, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்து சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி இது.

பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலிப் பாடம் கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே அரசின் நோக்கம். ஏற்கெனவே செயலி வடிவில் உள்ள மணற்கேணி, தற்போது பெரிய திரைகள் மற்றும் கணினியிலும் பயன்படுத்தும் வகையில் இணையதள வடிவில் வெளியிடப்படுகிறது’’ என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில்‌, பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்‌ துறை செயலாளர்‌ குமரகுருபரன்‌, சிவநாடார்‌ அறக்கட்டளை நிர்வாகிகள்‌ சார்பாகச் சுந்தர், திரு. பேனர்ஜி மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *