
சேலம் திருமணிமுத்தாற்றில் 10 நாட்களாகச் சாயக் கழிவுநீர் ஓடுவதைக் கண்டும் மாவட்ட நிர்வாகமும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சேர்வராயன் மலையில் உருவாகும் திருமணிமுத்தாறு சேலம் மாநகரம் வழியாகப் பாய்ந்து நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே நன்செய் இடையாற்றில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
சேர்வராயன் மலைப்பகுதியிலும் சேலம் மாநகரிலும் கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது.இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சாய ஆலைகளின் உரிமையாளர்கள் பல நாட்களாகத் தேக்கி வைத்திருந்த சாயக்கழிவுகளை அப்படியே வெள்ளத்தில் திறந்து விட்டனர்..
சாயக் கழிவுநீர் வயலில் பாய்ந்தால் பயிர்கள் அழிந்துவிடும் என்றும், இதனால் திருமணிமுத்தாறு மட்டுமின்றிக் காவிரி நீரும் மாசுபட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.மாசுபாட்டைத் தடுக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காசுக்காகக் கண்களைக் கட்டிக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.


