
திருப்பூர்: தீபாவளியை முன்னிட்டு ஏலச் சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமுறைவான பாஜக பிரமுகரைக் கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்து தர வேண்டும் என்று திருப்பூரில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஜக பிரமுகர் செந்தில்குமார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வாரம் மற்றும் மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளனர்.
தீபாவளி சீட்டு நிறைவடைந்து பொருட்கள் மற்றும் பணம் வழங்க வேண்டிய நிலையில் செந்தில்குமார் நிறுவனத்தை மூடி விட்டுத் திடீரெனத் தலைமறைவாகி விட்டார். சுமார் ரூ.3 கோடிவரை மோசடி பணத்துடன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் பணத்தை மீட்டு கொடுக்கக் கோரியும், ஏமாற்றிய நபரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள்-பெண்கள் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

