
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து மறைமுகமாகப் பேசுவதற்கு எந்த அவசியமும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேட்டியளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், விமானம் மூலம் பாட்னாவிற்கு செல்ல வந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, பாட்னாவில் நடைபெறும் அகில இந்திய நிர்வாகிகள் கூட்டத்தில், தேசிய அளவிலான முக்கிய பிரச்னைகள் குறித்தும் வாக்கு திருட்டு குறித்தும் ஆலோசிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
பின்னர் அவர், வரும் 28 ஆம் தேதி காங்கிரஸ் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் டெல்லியில் இருந்து பொறுப்பாளர் கிரீஷ் ஜடோங்கர் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், த.வெ.க உடன் மறைமுகமாகக் கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்துக்கு மட்டும் கட்டுப்பாடுகள் இல்லை. காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினால் கூட காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் என தெரிவித்தார்.


