
சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நின்று தேர்தல் களத்திலே நிற்கிறது என்றால், அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநில மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி,சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நின்று தேர்தல் களத்திலே நிற்கிறது என்றால், அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என்று குறிப்பிட்டார். இது ரசிகர் கூட்டம் இல்லை லட்சியக் கூட்டம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பணத்துக்காக நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை என்றும் தமிழ் இனத்துக்காக நிற்கிறோம் என்றும் தெரிவித்தார். நின்ற தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைந்தோம் என்றும் அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம் என்றும் கூறினார். ஐந்தாயிரத்தை வாங்குகிற மகளிர் அவர் கைகளில் 2 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது என்பதை உணர்ந்தால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிடும் என்று தெரிவித்தார்.



