
உதயநிதி ஸ்டாலின் தலை 10 கோடி! யார் இந்த அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா…
கடந்த 2ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது:
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனம்என்கிறபெயரேசமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் என்று பேசினார்…
பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்:
இவரது பேச்சுக்கு இந்தியாவின் பல பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்க்கு பதில் தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நான் எந்தச் சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம் இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்திலிருந்து ஒரு துளி கூடப் பின்வாங்கமாட்டோம் என்று சவால் விடும் விதத்தில் கூறியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி:
இந்நிலையில் உதயநிதியின் தலைக்கு உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா ரூ.10 கோடியை அறிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், “எனது தலையைச் சீவ ரூ.10 கோடி எதற்கு? 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும் என நகைச்சுவையோடு பதில் அளித்தார்.
யார் இந்த அயோத்தி சாமியார் ஜகத்குரு பரமஹம்சர் ஆச்சாரிய மகராஜ்:
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இந்தச் சாமியார் இதற்கு முன் போராட்டம் ஒன்றை கையிலெடுத்தார். அது என்னவென்றால் அக்டோபர் 2-ம் தேதிக்குள் இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரம் என அறிவிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் சரயு நதியில் ஜல சமாதி ஆகி விடுவேன் என மத்திய அரசிடமே சவால் விட்டார். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் தேசிய உரிமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் விடாப் பிடிவாதத்தோடு இருந்தவர்தான் இந்தச் சாமியார்.
ராமசரித மனாஸுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த பீகார் அமைச்சரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். ‘பேஷாரம் ரங்’ பாடல் தொடர்பான சர்ச்சையின்போது, பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு எதிராகவும் மிரட்டல் விடுத்தார். நடிகர் ஷாரூக் கானை நேரில் சந்தித்தால் உயிருடன் எரித்து விடுவேன் என்று பேசியவரும் இந்தச் சாமியார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


