
சபரிமலை கோயில் நகை திருட்டு விவகாரத்தில் கேரள அரசு மீது குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கம்யூனிஸ்டுகளும் பாஜகவினரும் மறைமுக தொடர்பில் இருப்பதாக விமர்சித்தார்.
கேரளமாநிலம் கோழிக்கோடு நகரில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், சபரிமலை கோயிலில் நகைத் திருட்டுப் போன விவகாரத்தில் அம்மாநில அரசை கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
கடவுளையும் இடதுசாரிகள் விட்டுவைக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய கார்கே, கேரளாவில் நடந்து வரும் இடதுசாரி முன்னணி ஆட்சியை மாற்றுவதற்கு அம்மாநில மக்கள் ஒரே அணியில் திரண்டு நிற்பதாகவும், பத்தாண்டுகால இடதுசாரி ஆட்சியில் கேரளம் என்ன முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
கடவுளையே விட்டுவைக்காமல் திருடும் இடதுசாரி முன்னணி ஆட்சியாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று வினவிய அவர், கேரள முதலமைச்சருக்கு சபரிமலைக் கோயிலில் திருடு போனது குறித்து சிறிதும் கவலை இல்லை என்றார். திருடியவர்களைத் தண்டிக்காத பிணராயி விஜயன், திருடியவர்கள் சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பளித்துள்ளதாக கார்கே குற்றஞ்சாட்டினார்.
மதுக்கடைகளை அதிகளவில் கேரளத்தில் திறந்திருப்பதாகவும், அம்மாநிலத்தின் கடன் தொகை 6 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகரித்துவிட்டதாகவும் அவர் விமர்சனம் செய்தார். கேரள கம்யூனிஸ்டுகளும் பாஜகவும் மறைமுக தொடர்பில் இருப்பதாகவும், பாரதிய ஜனதா கட்சி என்பதை கம்யூனிஸ்ட் ஜனதா பார்ட்டி என்றழைக்கலாம் என்றும் கிண்டலடித்த கார்கே, கேரளாவில் நடந்துவரும் ஆட்சியை மாற்ற அம்மாநில மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்..


