
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் செந்நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள குற்றால அனைத்து அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
பல மாதங்களுக்குப் பின் கனமழை பெய்து பெருமளவு வெள்ளம் வந்துள்ளதால் அருவிகளில் செந்நிறமாகப் புதுவெள்ளம் பாய்கிறது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி ஆர்ப்பரிப்புடன் வெள்ளம் பாய்கிறது.
மலைப்பகுதியில் இருந்து மண், கற்கள், மரத்துண்டுகள் வெள்ளத்தில் அடித்து வரப்படும் என்பதால் அருவிப்பகுதிக்கு ஆட்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தின் தொடக்கத்திலேயே குற்றால வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



