
தோல்வி பயத்தால், தேர்தல் ஆணையர் நியமிப்பதில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அரசுக் கலைக் கல்லூரியில், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14.07 இலட்சம் மதிப்பிலான 199 புத்தகங்களைக் கல்லூரியில் உள்ள நூலகங்களுக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்.மாணவர்களின் கல்வி மெம்படுவதற்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, குறிப்பாகத் தமிழக அரசும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது. என்று அப்போது பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்.ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துகின்ற மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், நாட்டின் 18வது பொதுத் தேர்தலை நாம் சந்திக்க உள்ள நிலையில் குழப்பம், திசை திருப்புகின்ற மற்றும் பதற்றத்தை உருவாக்கும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு செய்துக் கொண்டிருக்கின்றது.
தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதில், மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகச் சட்டம் இயற்றி உள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைவிட ஒரு நேர்மையான அமைச்சர் மத்தியில் இருக்கின்றாரா,
திட்டமிட்டு, தேர்தல் முறையையும், ஜனநாயக முறையையும் குழப்புகின்ற வேலையைத் தோல்வி பயத்தால் பாஜக அரசு வேகமாகச் செய்து வருகின்றது என அப்போது தெரிவித்தார்.


