RIP Sitaram Yechury:இறந்தும் மாறாத கம்யூனிச கோட்பாடு: உடலைத் தானமாக வழங்கிய குடும்பத்தினர்!

Advertisements

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உயிரிழந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கே யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர்.

உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

1952ம் ஆண்டு பிறந்த யெச்சூரி 1974ம் ஆண்டு இந்திய மாணவர் கூட்டமைப்பில் (SFI) உறுப்பினராகச் சேர்ந்தார். அன்று முதல் பொதுவுடைமைக்காகத் தொடர்ந்து பாடு பட்டு வந்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 3 முறை மாணவர் அமைப்பின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவரானார்.

அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட்ட யெச்சூரி தனது கொள்கைகளில் யாருக்காகவும், ஒருபோதும் சமரசமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தார். 2005ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து 3 முறை மாநிலங்களை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த யெச்சூரியின் உடலை அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கே அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள அறிக்கையில், “சீதாராம் யெச்சூரி கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நிமோனியா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இன்று பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். மருத்துவ கல்விக்காகவும், ஆய்வுக்காகவும் யெச்சூரியின் குடும்பத்தினர் அவரது உடலை மருத்துவமனைக்குத் தானமாக அளித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *