Advertisements

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் பெற மறுத்த மாணவர் ஒருவர் பேராசிரியர் மூலம் பட்டத்தை பெற்றுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, கோட்டூர்புரம் தமிழ் இணைய கல்விக்கழகம் கலையரங்கத்தில் தமிழ்நாடு இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெர்றது. பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், பட்டம் வென்ற மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழை வழங்கி புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சி மேடையில் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் அமைச்சர் நிற்க மணவர்கள் வரிசையாக வந்து பட்டங்களை வாங்கி சென்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரை அழைத்ததும் மாணவர்கள் மேடைக்கு வந்து அமைச்சர் கையால் பட்டம் வாங்கிவிட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
அப்போது மேடைக்கு வந்த மாணவர் ஒருவர், அமைச்சர் ராஜ்மோகனிடம் பட்டம் வாங்க மறுத்துவிட்டு, தனது பேராசிரியர் கையால் வாங்கிக்கொள்ள விரும்புவதாக கூறினார். இதைக்கேட்ட ராஜ்மோகன், உடனே தாரளமாக வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்வது போல மாணவரிடம் ஏதோ கூறினார்.
உடனே அருகில் இருந்த பேராசிரியரிடம் அந்த மாணவர் பட்டத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் அமைச்சர் ராஜ்மோகனுடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிட்டு சென்றார். பட்டமளிப்பு விழாவில் மேடையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. மாணவர் செய்ததில் எந்த தவறும் இல்லை என ஒரு தரப்பினரும், பட்டமளிப்பு விழா மேடையேறிய பிறகு இப்படி செய்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்
Advertisements


